மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா உண்டியல் வசூல் ரூ.31 லட்சம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா உண்டியல் வசூல் ரூ.31 லட்சம்
12-03-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடைவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவில் குமரி மாவட்டம் மட்டும் அல்லாது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு திருவிழாவிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவையொட்டி கோவிலில் உள்ள வார்ப்பு உண்டியல் மற்றும் நிரந்தர உண்டியல்களில் சேர்ந்த காணிக்கைப்பணம் ஏற்கனவே 3 முறை எண்ணப்பட்டிருந்தது. 4-வது முறையாக உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்த பணியில் திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் அருணாசலம், ஆய்வாளர் கண்ணன், முதுநிலை கணக்கு அதிகாரி இங்கர்சால், பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், என்ஜினீயர் அய்யப்பன், கணக்கர் ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உண்டியல் பணத்தை மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் எண்ணினார்கள்.
இதில் ரூ.14 லட்சத்து 91 ஆயிரத்து 269 காணிக்கைப்பணம் கிடைத்தது. மேலும் 141 கிராம் தங்கமும், 115 கிராம் வெள்ளியும் இருந்தது. இது தவிர வெளிநாட்டு பணமும் காணிக்கையாக கிடைத்தன. இந்த காணிக்கையுடன் இதற்கு முன்பு 3 முறை எண்ணப்பட்ட காணிக்கையும் சேர்த்து மொத்தம் ரூ.30 லட்சத்து 98,539 கொடைவிழா காணிக்கையாக கோவிலுக்கு கிடைத்துள்ளது. இந்த வசூல், கடந்த ஆண்டைவிட ஒரு லட்ச ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous News Next News