மண்டைக்காட்டில் கடல் அலை இழுத்து சென்ற பிளஸ்–2 மாணவர் உடல் கரை ஒதுங்கியது

மண்டைக்காட்டில் கடல் அலை இழுத்து சென்ற பிளஸ்–2 மாணவர் உடல் கரை ஒதுங்கியது
12-03-2015
வில்லுக்குறியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் ஹரிஷ் (வயது 18). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படித்து வந்தார். அவர் நேற்று முன்தினம் தேர்வு எழுதிவிட்டு நண்பர்களுடன் மண்டைக்காடு கோவிலுக்கு வந்தார். அங்கு அவர்கள் அனைவரும் சாமி கும்பிட்டனர். அதன்பிறகு அவர்கள் மண்டைக்காடு கடலில் குளித்தனர்.
அப்போது வந்த பெரிய கடல் அலை ஹரிசை இழுத்து சென்றது. அவருடன் வந்த மாணவர்கள் கூச்சல் போட்டனர். ஆனாலும் ஹரிசை காப்பாற்ற முடியவில்லை. இதுபற்றி குளச்சல் கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து மாயமான மாணவரை கடலில் சென்று தேடி பார்த்தனர். ஆனாலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

நேற்று 2–வது நாளாக நீச்சல் வீரர்கள் மற்றும் போலீசார் மாணவர் ஹரிசை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மண்டைக்காடு அருகே உள்ள வெட்டுமடை என்ற இடத்தில் ஒரு வாலிபர் உடல் கரை ஒதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பார்த்துக்கொண்டு இருந்தனர். அதே சமயம் மாணவரின் தந்தை மணிகண்டனும் அங்கு வந்து, உடலை பார்த்து விட்டு இறந்தது தன்னுடைய மகன் ஹரிஷ் தான் என்று அடையாளம் காட்டினார்.
அதைத்தொடர்ந்து மாணவர் ஹரிஷ் உடலை, குளச்சல் கடலோர பாதுகாப்பு படை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுபற்றி குளச்சல் கடலோர பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment

Previous News Next News