மணவாளக்குறிச்சி அருகே அங்கன்வாடி பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

மணவாளக்குறிச்சி அருகே மண்டைக்காடு சாரவிளையை சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மனைவி சுனிதா மேரி (வயது 51). அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மகன் பெஞ்சமினுடன் மோட்டார் சைக்கிளில் குருந்தன்கோடு ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளை பெஞ்சமின் ஓட்டி சென்றார். சுனிதா மேரி பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் திருநயினார்குறிச்சி பகுதியில் சென்ற போது, எதிரே இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அவர்கள் திடீரென தாயும், மகனும் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து, சுனிதா மேரியை மிரட்டி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த சுனிதாமேரி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர்கள் நகையுடன் தப்பி சென்றனர்.

இதுகுறித்து சுனிதா மேரி மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகையை பறித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த துணிகர வழிப்பறி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

Previous News Next News