தமிழகத்தில் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைவு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மே 3 ஆம் தேதி ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி, தமிழகத்திலும் கொரோனா தீவிரமடைந்து வருவதால் வரும் 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 3 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு சார்ந்த துறைகளும் முடங்கி போயுள்ளதால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் முடங்கி போயுள்ளது.

இந்நிலையில், ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த சிலிண்டர் விலை, கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3வது மாதமாக குறைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஏப்ரல் மாதத்தில் ரூ.761.50 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.569.50 ஆக குறைந்துள்ளது. இதனால் குடும்பத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் மானியமில்லாத வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை ரூ.1404 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.259.50 குறைந்து, ரூ.1144.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மானிய விலை சிலிண்டராக இருந்தாலும், மானியத்தை கழிக்காமல் முழு தொகையையும் அளித்துத்தான் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் வாங்க வேண்டும். பின்னர், மானியத்தொகை, வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous News Next News