மண்டைக்காடு கடற்கரையில் அலை இழுத்துச் சென்ற பிளஸ்–2 மாணவனை தேடும் பணி தீவிரம்
11-03-2015
வில்லுக்குறியை சேர்ந்தவர் மணிகண்டன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் ஹரீஸ் (வயது 17). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
மண்டைக்காடு கோவில் திருவிழாவுக்கு ஹரீஸ் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சென்றனர். அவர்கள் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு கடற்கரைக்கு சென்றனர். அங்கு அலையில் கால் நனைத்து கொண்டிருந்த போது ஹரீசையும் அவரது நண்பர்களையும் திடீரென வந்த கடல் அலை இழுத்து சென்றது.
அவர்கள் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அவர்களை மீட்க சென்றனர். இதில் ஹரீசை தவிர மற்ற இருவரும் மீட்கப்பட்டனர். ஹரீஸ் மட்டும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு மாயமாகிவிட்டார். அவரை நீச்சல் வீரர்கள் மற்றும் போலீசார் கடலில் தேடினர். விடிய விடிய இந்த தேடுதல் வேட்டை நடந்தது.

இன்று காலையில் ஹரீஸ் உடலை தேடும் பணி 2–வது நாளாக நடந்தது. இதற்கிடையே தகவல் அறிந்து ஹரீசின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கரையில் நின்றபடி கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. பிளஸ்-2 தேர்வு எழுத வேண்டிய மகனை கடல் அலை இழுத்து சென்றுவிட்டதே என அவர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்கள் மனதை கரைய வைத்தது.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்